மன்னார் நீதிமன்ற துப்பாகிச்சூடு; சந்தேக நபர்கள் கைது
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விடுதியில் ஒரு கைக்குண்டுடன் மறைந்திருந்த சந்தேக நபர்கள்
கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் இணைந்து நேற்று (28) தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.
இதன்போது, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில உள்ள ஒரு விடுதியில் ஒரு கைக்குண்டுடன் மறைந்திருந்த மேற்படி குற்றத்தைத் திட்டமிட்ட பிரதான சந்தேக நபரும், அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 22 மற்றும் 38 வயதுடைய உயிலங்குளத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.