மட்டக்களப்பில் இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம்
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய மாம்பழம் இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று மாலை மாம்பழத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அதிக மதிப்பில் ஏலம்போன மாம்பழம்
ஆலயத்தில் விசேட வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வந்ததை தொடர்ந்து வெளிவீதியுலா நடைபெற்றதுடன் அங்கு மாம்பழ திருவிழா நடைபெற்றது.
முருகப்பெருமானும் பிள்ளையாரும் மாம்பழத்தினைப் பெறுவதற்காக மேற்கொண்ட செயற்பாடுகளையும் தாய் தந்தையர்களே உலகம் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் மாம்பழ திருவிழா நடாத்தப்படுகின்றது.
இந்நிலையில் மாம்பழத் திருவிழாவுக்கு பயன்படுத்தப்பட்ட மாம்பழம் ஆலயத்தில் ஏலத்திற்கு விடப்பட்டபோது சுமார் இரண்டரை இலட்சம் ரூபா ஏலத் தொகையினைக்கொண்டு இளையதம்பி தவாகரன் என்ற அடியார் மாம்பழத்தினை வாங்கிக்கொண்டார்.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மதிப்பில் ஏலம்போன மாம்பழமாக இது காணப்படுகின்றது.