எரிபொருளுக்காக சென்றவர் மோட்டார் சைக்கிளை பறிகொடுத்தார்!
எரிபொருள் பெறுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அம்பலாங்கொடை ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக நேற்று அதிகாலை களவுபோன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
SP XU 5973 எண் கொண்ட சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கடந்த இரு நாட்களுக்கும் மேலாக எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தது.
அதன் உரிமையாளர் நேற்று அதிகாலை 2 மணியளவில் அவ்விடத்தை விட்டு வெளியேறிய நிலையில் , எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஏனையவர்களிடம் தனது மோட்டார் சைக்கிளை அவதானிக்குமாறு கூறிவிட்டு அவர் வீட்டிற்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை எரிபொருள் வரிசையில் இருந்து எடுத்துக்கொண்டு சென்றமை அருகில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.