கழுத்து நெரித்து அத்தையை கொலை செய்த நபர்; காரணத்தால் அதிர்ச்சி
கழுத்து நெரித்து பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மஹபாகே பொலிஸாரால் இன்று (05) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் வத்தளை - மஹாபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரகஹபொக்குன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இடம்பெற்றுள்ளது.
கடனை திருப்பி தராததால் தகராறு
மஹாபாகே, கெரகஹபொக்குன பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 40 வயதுடைய சந்தேக நபர் புத்தளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரனின் மகன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணத்தை கடனாக பெற்றுள்ள நிலையில், கடனை திருப்பி தராததால் சந்தேக நபருக்கும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த சந்தேக நபர், பெண்ணை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடி அதனை அடகு வைத்து பணத்தை பெற்று, புத்தளம் பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.