யாழில் நிராகரிக்கபட்ட முக்கிய கட்சியின் வேட்புமனுக்கள் ; நீதிமன்றை நாடவுள்ள முக்கிய புள்ளி
யாழ் . மாவட்டத்தில் சில சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் எமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கட்சியின் சார்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதனை குறிப்பிட்டுள்ளார்.
நிராகரிக்கபட்ட வேட்புமனுக்கள்
இது தொடர்பில் கருத்துரைத்த அவர்,
யாழ் . மாவட்டத்தில் உள்ள இரண்டு சபைகளை தவிர ஏனைய 15 சபைகளுக்குமான வேட்பு மனுக்களை நாம் கையளித்திருந்தோம். அவற்றில் பல சபைகளில் எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வேட்பு மனுவில் , 35 வயதுக்கு உட்பட்டவர்களின் பிறப்பு சான்றிதழ்களில் சில போட்டோ பிரதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் , அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ்கள் கையளிக்கப்படவில்லை எனும் காரணத்தால் அவை நிராகரிக்கப்பட்டதாக எமக்கு கூறப்பட்டுள்ளது.
அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ்கள்தான் கையளிக்கப்பட வேண்டும் என கடந்த 15ஆம் திகதி ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தற்போது கூறுகின்றார்கள்.
ஆனால், அது தொடர்பில் எமக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை. இவை திட்டமிட்ட முறையில் எம்மை நிராகரிக்கும் செயற்பாடாகவே பார்க்கிறோம்.
இது தொடர்பில் நாம் நீதிமன்றில் வழக்கு தொடர்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.