மட்டக்களப்பில் பொதுமக்களின் உடனடிச் செயல்பாட்டால் தவிர்க்கப்பட்ட பெரும் சேதம்
மட்டக்களப்பு, கல்லடி வேலூர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை 10.00 மணியளவில் குறித்த வீட்டின் பகுதியிலிருந்து திடீரென கரும்புகை எழும்புவதை அவதானித்த அண்டை வீட்டின் உரிமையாளரும், அப்பகுதிப் பொதுமக்களும் உடனடியாகச் செயற்பட்டுள்ளனர்.

சாதுரியமான செயல்பாடு
அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தண்ணீரை அடித்து, தீ மேலும் பரவாமல் தடுத்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை, தீ விபத்து குறித்து அயலவர்களால் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கு அவசரத் தகவல் வழங்கப்பட்டது.
தகவலையடுத்து தீயணைப்புப் படையினர் சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
பொதுமக்களின் துரிதமான மற்றும் சாதுரியமான தலையீடு காரணமாக, தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்னரேயே தீ ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டதால், பெரும் சொத்துச் சேதங்களோ அல்லது உயிர் ஆபத்துகளோ ஏதுமின்றி பாரிய விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.