ஊரடங்கு தளர்வு; கொவிட் தடுப்பு செயலணியின் முக்கிய தீர்மானம்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என கொவிட் −19 தடுப்புக்கான விசேட செயலணி தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர், மக்கள் ஒன்று கூடும் பட்சத்தில், கொவிட் மீண்டும் பரவும் அபாயம் ஏற்படலாம் என குழுவில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனால், சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர், அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார தரப்பினர் கூறியதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொவிட் −19 தடுப்புக்கான விசேட செயலணி இன்று முற்பகல் கூடிய போதே இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.