பிரபல போதை வியாபாரி டுபாய் சுத்தாவின் பிரதான விநியோகஸ்தர் உள்ளிட்ட குழு சிக்கியது
பெருமளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 'டுபாய் சுத்தா' என்பவரின் போதைப்பொருள் வர்த்தகத்தில், பண்டாரகம பகுதிக்கான பிரதான விநியோகஸ்தர் உட்பட 7 சந்தேக நபர்களை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் பொதி செய்யப்படும் இடமொன்றை சுற்றிவளைத்த போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பு
இதன்போது 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 50 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருட்களை பொதி செய்ய பயன்படுத்தப்படும் விசேட காகிதங்கள், பொலித்தீன் பைகள், 4 கையடக்கத் தொலைபேசிகள், கார் ஒன்று மற்றும் ஏனைய உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பண்டாரகம, வெல்மில்ல அலோத்தியாவ பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான குழுவினர் தங்கியிருப்பதாக பண்டாரகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சன்ன அமரசேகரவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ள நிலையில், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.