விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்
குளியாபிட்டி- மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் இன்று(6) இடம்பெற்ற பயங்கர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேன், மோட்டார் சைக்கிளுடன் மோதியதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளை முந்த முயன்றபோது விபத்து
குளியாபிட்டியிலிருந்து மாதம்பே நோக்கி பயணித்த வேன், அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிளை முந்த முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால், எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.
இருவரும் குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் பத்துலு ஓய பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பின்னால் அமர்ந்திருந்த பெண் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக வேன் சாரதி மற்றும் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர்.