யாழ் - வவுனியா வீதியில் பராமரிப்பற்ற அரசப் பேருந்து சாரதிக்கு சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணம் - வவுனியா வீதியில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த பராமரிப்பு குறைபாடுகளைக் கொண்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்தின் சாரதியின் அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பத்து நாட்களுக்குள் பேருந்தின் குறைபாடுகளை சரிசெய்யாவிட்டால், அந்தப் பேருந்துக்கு நிரந்தர தடை உத்தரவு விதிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரித்துள்ளது.
நேற்றைய தினம் (28), யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற வவுனியா டிப்போவுக்கு சொந்தமான அரசப் பேருந்து, வவுனியா மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்தப் பரிசோதனையின்போது, பல அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, சாரதிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், சிலருக்கு குற்றப் பத்திரங்களும் வழங்கப்பட்டன.
குறிப்பாக, வவுனியா டிப்போவுக்கு சொந்தமான ஒரு பேருந்தில் கடுமையான குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டன. இதனால், அந்தப் பேருந்தின் சாரதியின் அனுமதிப்பத்திரம் போக்குவரத்து பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு, தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.
மேலும், பேருந்தில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை அடுத்த 10 நாட்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைச் சரிசெய்யத் தவறினால், பேருந்தின் சேவைக்கு நிரந்தர தடை உத்தரவு விதிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனினும், இந்த அறிவுறுத்தல்களை மீறி, குறித்த பேருந்து இன்றும் (29) சேவையில் ஈடுபட்டு வருவது கவனிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு குறைபாடுகளுடன் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவது குற்றமாகக் கருதப்படுவதாகவும், இதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.