15 வயது சிறுமி கடத்தல்; வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பு
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற 18 வயது இளைஞனையும் அவரது சிறிய தாயாரையும் பொலிஸார் வாகரையில் வைத்து கடந்த (24.02.2024) இரவு கைது செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் பொலிஸ் பிரிவில் வசித்து வந்த சிறுமி கடந்த (07.02.2024) ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் அவர் வீடு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.
இதையடுத்து கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையின் போது குறித்த சிறுமியை அவரது காதலன் வாகரைப் பிரதேசத்திலுள்ள அவரது சிறியதாயாரின் வீட்டிற்கு கடத்திச் சென்று வைத்துள்ளமை தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் சிறுமியை மீட்டதுடன் கடத்தல் குற்றச்சாட்டில் 18 வயதுடைய காதலனையும் அவருக்கு உடந்தையாகச் செயற்பட்ட 47 வயதுடைய சிறிய தாயாரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (25.02.2024) பொலிஸார் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் (07.03.2024) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.