நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு ஆரம்பக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தலானது இன்று காலை 08:00 மணி முதல் நாளை காலை 08:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்து
அதன்படி, நுவரெலியா மாவட்டம் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பதுளை மாவட்டத்தின் மீகாககிவுல மற்றும் கந்தகெட்டிய ஆகிய பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரன்கெத்த மற்றும் மதுரட்ட ஆகிய பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் நிலவெடிப்பு, மரங்கள் சாய்ந்து விழுதல் மற்றும் திடீர் நீர் ஊற்றுக்கள் தோன்றுதல் போன்ற மண்சரிவு அறிகுறிகள் தென்படின், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.