நானுஓயாவில் மண்சரிவு ; குடியிருப்புக்களை விட்டு மக்கள் வெளியேற்றம்
நுவரெலியா நானுஓயா – சமர்செட், லேங்டல் தோட்டத்தில் இன்று (30) தொடர் லயின் குடியிருப்பின் பின்புறத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு காரணமாக அங்கு வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக நானுஓயா கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிராம சேவகர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தோட்ட நிர்வாகத்தினர் மக்களை சந்தித்து நிலைமையை விசாரித்ததோடு, நிவாரண உதவிகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
தொடரும் மழை காரணமாக பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சத்த்தில் தாம் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மண்சரிவினால் சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் எனினும் இதுவரை எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்துகளோ எதுவும் ஏற்படவில்லையென மக்கள் தெரிவித்தனர்.