தமிழர் பகுதியில் பறிபோகவுள்ள பெருமளவு ஏக்கர் நிலங்கள்!
கிளிநொச்சி - பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் 1840 ஏக்கர் நிலத்தில் இராணுவம் பண்ணை அமைப்பதற்கு அமைச்சரவை பத்திரம் நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவிற்கு பளைப் பகுதியில் தற்போது 4 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 1840 ஏக்கர் நிலம் விவசாய அமைச்சின் கீழ் இயங்கிய மக்கள் பெருந்தோட்டச் சபைக்கு 1988 இல் வழங்கியதாக அந்தச் சபை உரிமை கோரி வருகின்றது.
ஆவணமோ சான்றுகளோ இல்லை
அதேசமயம் பெருந்தோட்டச் சபைக்கு 1988 இல் 1840 ஏக்கர் நிலம் வழங்கியதற்கான ஆவணமோ சான்றுகளோ அந்தச் சபையிடமோ அல்லது ஆணைக்குழுவிடமோ இல்லாத சூழலிலும் சபை உரிமை கோரி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் குறித்த சபையின் பெயரில் நிலத்தை வழங்கி இராணுவத்தினர் மூலம் பெரும் பண்ணை அமைப்பதற்காக 1840 ஏக்கரையும் சபையின் பெயரில் வழங்க எதிர் வரும் திங்கள் கிழமை 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இதற்கான சகல ஏறபாடுகளும் விவசாய அமைச்சு மற்றும் காணி அமைச்சு என்பன இணைந்து முன்னெடுப்பது தற்போது தெரியவந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.