ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சென்ற குருந்தூர் விவகாரம்!
குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றதாக கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் குருந்தூர்மலை ஆதி சிவன் கோயில் ஆக்கிரமிப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. முன்வைத்த கூற்றுக்கள் தொடர்பிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.
குருந்தூர்மலை பிரச்சினையை குறைத்து மதிப்பிடவில்லை
இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறுகையில்,
“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த குருந்தூர்மலை பிரச்சினையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த விடயத்தில் நான் தனிப்பட்ட ரீதியிலும் கவனம் செலுத்துவேன் என்றும் எந்தவிதத்திலும் எவரும் இனவாதமாகச் செயற்படுவதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது எனவும் அவர் கூறினார்.
அத்துடன் நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படுபவர். நாட்டின் அபிவிருத்தி உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதுவே அவசியமாக உள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.