குருந்தூர்மலை சிங்கள பௌத்தர்களின் சொத்து; அமைச்சர் விதுர
குருந்தூர்மலை சிங்கள பௌத்தர்களின் சொத்து என்றும், அங்குள்ள விகாரையை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது. அங்கு பௌத்தர்கள் சென்று வழிபடுவதை எவரும் தடுக்க முடியாது எனவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
குருந்தூர்மலை தொடர்பில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளைகளைத் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரிவரப் பின்பற்றாது உதாசீனம் செய்திருக்கின்றார் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்றுக் கட்டளை வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை
அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“குருந்தூர்மலை தொடர்பாகவோ அல்லது அங்குள்ள விகாரை குறித்தோ முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்து வருகின்றன . கட்டளைகள் – தீர்ப்புக்கள் தொடர்பில் என்னால் பதிலளிக்க முடியாது.
ஆனால், குருந்தூர்மலை சிங்கள பௌத்தர்களின் சொத்து. அங்குள்ள விகாரையை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது. அங்கு பௌத்தர்கள் சென்று வழிபடுவதை எவரும் தடுக்க முடியாது.
இந்த நிலைப்பாட்டில் நான் உறுதியாகவுள்ளேன்.
குருந்தூர்மலையை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் சிங்கள பௌத்தர்களுக்குக் கிடையாது என தெரிவித்த அமைச்சர், குருந்தூர்மலையை வைத்து அரசியல் செய்வதைத் தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கூறினார்.