தமிழர் பகுதியில் உர பையில் கொத்து ரொட்டி; முற்றுகையிடப்பட்ட உணவகம்
மன்னார் மூர்வீதியில் உணவகம் ஒன்றில் கொத்து தயாரிக்க பயன்படும் ரொட்டியை யூரியா உரம் பொதியிடும் பையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சுகாதாரத்துறையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு தொடர்ச்சியாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை தொடர்ந்து நேற்று (20) மன்னார் மூர்வீதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அசுத்தமான முறையில் உணவுகள்
அதேநேரம், குறித்த உணவகம் அனுமதியின்றி இயங்கி வந்ததுடன் உணவகத்தில் பணிபுரியும் நபர்கள் சுகாதார அனுமதி இன்றி குறித்த உணவகத்தை நடத்தியமை தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த உணவகத்தில் அசுத்தமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டமை, அசுத்தமான முறையில் உணவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை, கழிவு நீர் ஒழுங்காக வெளியேற்றப்படாமை, உணவு தயாரிப்பவர்கள் கையுறை, தலையுறை பயன்படுத்தாமை போன்ற பல்வேறு சுகாதார குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த உணவகத்துக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதேநேரம், எழுத்தூர் பகுதியில் வியாபார நிலையமொன்றில் காலாவதியான பொருட்கள் காணப்பட்டமை, பொருட்கள் ஒழுங்கான முறையில் சுத்தம் செய்யப் பட்டிருக்காமை,எண்ணை வகைகள் ஒழுங்கான முறையில் களஞ்சியப்படுத்தப்படாமை கண்டறியப்பட நிலையில் குறித்த வியாபார நிலையத்திற்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.