அட்சய திருதியையில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது தெரியுமா?
செல்வம் பெருகும் மற்றும் மங்கல நிகழ்வுகளுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் அட்சய திருதியை இன்று (19,) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அட்சயம் என்பதற்கு 'குறையாதது' என்று பொருள். இந்நாளில் தொடங்கப்படும் நற்செயல்களும், வாங்கப்படும் பொருட்களும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகமாகும்.
இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் முக்கிய நேரங்கள் தொடர்பில் நோக்குகையில், சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை தினமான இன்று, தங்கம் மற்றும் மங்களகரமான பொருட்களை வாங்கக் கீழ்க்கண்ட நேரங்கள் உகந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளன.

திருதியை திதி தொடக்கம்: ஏப்ரல் 19, காலை 10:49 மணி. திருதியை திதி முடிவு: ஏப்ரல் 20, காலை 07:27 மணி. தங்கம் வாங்கச் சிறந்த நேரம்: இன்று காலை 10:49 மணி முதல் நாளை ( 20) அதிகாலை 05:51 மணி வரை.
இந்த ஆண்டு சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியிலும் உச்ச நிலையில் சஞ்சரிப்பதால், 'அட்சய யோகம்' எனும் அபூர்வ கிரக நிலை உருவாகியுள்ளது.
இந்த சுப நேரத்தில் தொடங்கும் புதிய வணிக முயற்சிகள் மற்றும் முதலீடுகள் பெரும் வெற்றியளிக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் தவிர வேறு என்ன வாங்கலாம்? இந்த நன்நாளில் தங்கம் வாங்க இயலாதவர்கள், மங்களகரமான பலன்களைப் பெற கல் உப்பு மற்றும் பச்சரிசி, தானிய வகைகள்,வெள்ளி பொருட்கள் மற்றும் புத்தாடைகள் ஆகிய பொருட்களை வாங்குவது நன்மை பயக்கும்.
அட்சய திருதியை என்பது வெறும் பொருள் வாங்குவதற்கான நாள் மட்டுமல்ல, அதன் பின்னணியில் பல்வேறு புராணக் கதைகள் உள்ளன.
பிரம்ம தேவன் உலகைப் படைக்கத் தொடங்கிய நாள்,விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் பிறந்த தினம்,பார்வதி தேவி 'அன்னபூரணி'யாக அவதரித்து சிவபெருமானுக்கே உணவளித்த நாள்,பகீரதனின் தவத்தால் கங்கை பூமிக்கு வந்த புனித தினம் ஆகிய சிறப்புக்கள் அடங்கிய சிறப்பான நாளாகும்.
இந்நாளில் ஏழைகளுக்கு குடை, ஆடை மற்றும் உணவு போன்றவற்றை 'தானம்' செய்வது தங்கம் வாங்குவதை விட மேலான புண்ணியத்தைத் தரும் என்பது ஆன்றோர் வாக்கு.