இந்திய மீனவர்களுக்கு பெரும் தொகை அபராதம் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம்!
வடக்கு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு வடக்கில் இதுவரை விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் கடந்த 22 ஆம் திகதி விதித்துள்ளது.
64 லட்சம் அபராதம்
அதன்படி, கிளிநொச்சி இரணைதீவு அருகே சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த எட்டு இந்திய மீனவர்களுக்கு சட்டவிரோத மீன்பிடித்தலுக்கான முதல் குற்றச்சாட்டில் ரூ. 60 லட்சம் அபராதமும், இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இரண்டாவது குற்றச்சாட்டில் தலா ரூ. 50,000 என ரூ. 4 லட்சமாக மொத்தம் 64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு கூடுதலாக, நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனையையும் அறிவித்து, இது ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனையாக வழங்கியுள்ளது.
ஜனவரி 8 ஆம் தேதி கடற்படையினரால் எட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மீன்வள ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அதன் பிறகு கிளிநொச்சி நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்தது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அபராதத்தை செலுத்த யாரும் முன்வராததால், அவர்களை மேலும் விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.