24 மணி நேரமும் மூடிய அறைக்குள் அடைத்து வைத்துள்ளனர்; புலம்பிய ரிஷாத் பதியுதீன்
24 மணிநேரமும் தன்னை மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, 102 நாட்களாக சி.ஐ.டி யில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியும், பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள். என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்து வைத்துள்ளார்கள்.
97 நாட்கள் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டு, மலசலகூடத்துக்கு மட்டும் என்னை வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள். இன்றுவரை, எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை.
நான் பொய் கூறவில்லை. வேண்டுமென்றால் வந்து பார்க்க முடியும் எனவும் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்களே, இன்னுமொரு விடயம். என்னைக் கைது செய்தபோது, பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் “என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?” என்று நான் கேட்டபோது, எனது அமைச்சில் பணி புரிந்த மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன், ஒன்றரை நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாக கூறினார்கள்.
இதனால்தான் என்னை கைது செய்துள்ளதாக கூறினார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை ஜனாதிபதி அவர்களே எனவும் அவர் கூறியுள்ளார்.