கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியலில்!
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, உள்ளிட்ட 7 சந்தேகநபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்ல, இன்று (29) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பெப்ரவரி 15 ஆம் திகதி, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ரம்புக்வெல்ல மற்றும் முன்னாள் சுகாதார செயலாளர் ஜனக சந்திரகுப்த உட்பட ஆறு பேர் பெப்ரவரி 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.