கெஹெல்பத்தர பத்மே தாயாரின் கோரிக்கை; நீதிமன்றின் உத்தரவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள கெஹெல்பத்தர பத்மே, அந்த திணைக்களத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட மாட்டார் என வழங்கப்பட்ட உறுதிமொழியை டிசம்பர் 2 ஆம் திகதி வரை நீட்டித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
கெஹெல்பத்தர பத்மேவின் தாயார் , தனது மகனின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கெஹெல்பத்தர பத்மேவின் தாயார் ரிட் மனு
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேராவின் இணக்கத்துடன் உறுதிமொழி நீட்டிப்பு செய்யப்பட்டது. மேன்முறையீட்டுப் நீதிமன்றின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன் இந்த மனு அழைக்கப்பட்டது.
அத்துடன் மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த டிசம்பர் 2 ஆம் திகதி மனுவை அழைக்குமாறு அமர்வு உத்தரவிட்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மேவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியே உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாட்டோம் என்று பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் அளித்த முந்தைய உறுதிமொழியை அந்தத் திகதி வரை நீட்டிக்குமாறு கோரினார்.
இந்தக் கோரிக்கையை பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஏற்றுக்கொண்டதை அடுத்து , அடுத்த நீதிமன்றத் திகதி வரை குறித்த உறுதிமொழியை நீட்டிக்க நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனின் உயிருக்கான பாதுகாப்பை உறுதி செய்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வெளியே உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர் நீதிமன்றத்தில் கெஹெல்பத்தர பத்மே தாயார் மனுவை தாக்கல் செய்துள்ளார்.