நீதிபதி சரவணராஜா பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை; நீதி அமைச்சர்
தமக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியை இராஜினாமா செய்த முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதவான் பதவி விலகல் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய தகவலிலேயே நீதி அமைச்ச இவ்வாறு கூறியுள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம்
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தமது பதவியிலிருந்து விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
தமது பதி விலகல் கடிதத்தை நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலகத்துக்கு சரவணராஜா கடந்த 23 ஆம் திகதி அனுப்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஐந்து வழக்குகளுக்கு அவர் பிரதிவாதியாக நீதிபதி ரீ.சரவணராஜா பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தால் ஒரு நீதிபதியாக அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சரவணராஜாவுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்பு
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி கடந்த வாரம் கொழும்புக்கு பயணம் செய்திருந்ததாகவும் அவரது வாகனத்தை விற்பனை செய்துள்ளதாகவும் விஜேயதாச ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது சரவணராஜாவின் கொழும்புக்கான பயணத்தின் போது அவர் மேற்குலக நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்துள்ளதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பில் தாம் தனிப்பட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் விஜேயதாச ராஜபக் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அனைத்து நீதிபதிகளுக்கும் வழங்கப்பட்ட அதே பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதிபதி தனது பதவியை இராஜினாமா செய்த சம்பவம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.