கிளிநொச்சி இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும்; இறுதி ஊர்வலத்தில் சலசலப்பு
கிளிநொச்சி பூநகரி இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டி, அவரின் இறுதி ஊர்வலத்தின் போது பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தம்பிராய் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டு
இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பூநகரி செம்மன் குன்று பகுதியைச்சேர்ந்த கந்தசாமி பிரணவனின் இறுதிக்கிரியை இன்று நடைபெற்றது.
இந் நிலையில் இளைஞனின் கொலைக்கு நீதி வேண்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வாள் வெட்டுக் குழுக்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள், உயிரை பறித்தவரை ஒரு போதும் மன்னிக்காதே, போதையை கூண்டோடு ஒழிப்போம் போன்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதோடு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வலியுறுத்தி, பூநகரி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களிடம், பொது மக்களின் கையொப்பம் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டது.
அதேவேளை இளைஞன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேர் பூநகரி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.