விவாகரத்து வழக்கில் லஞ்சம் வாங்கிய நீதிபதிக்கு விளக்கமறியல்
விவாகரத்து சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக 5000 ரூபாவினை இலஞ்சமாக கோரிய புத்தளம் காதி நீதிபதிக்கு புத்தளம் நீதிமன்ற நீதிவான், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் காதி நீதிபதி முகமட் என்பவரை அணுகி விவாகரத்து சான்றிதழ் ஒன்றை பெறுவதற்காக 5000 ரூபாயை அவர் இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் மாறுவேடத்தில் சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நீதிபதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அலி சப்ரிக்கு தொடர்ச்சியான முறைப்பாடுகள்
இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரான காதி நீதிபதி, அன்று இரவு புத்தளம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் குறித்த காதி நீதிபதி தொடர்பிலான விமர்சனங்கள் மற்றும் அவரின் முறையற்ற செயற்பாடுகள் ஊடகங்களில் வெளியாகி இருந்தது.
அத்துடன் இவ்விடயம் தொடர்பாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.
இதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் மற்றும் நீதி அமைச்சருக்கும் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கும் இது தொடர்பான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.