கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிவாகை சூடிய இரு இலங்கை தமிழர்கள்
கனடா பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இலங்கை தமிழர்கள் ஹரிஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 2 பேர் வெற்றி பெற்றுள்ளனா்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஹரி ஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 2 பேரும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட நிலையில் தற்போது அவர்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை
கனடா பாராளுமன்ற தேர்தல் நேற்று (28) நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று (29) காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அப்போது தொடக்கம் முதலே, முன்னாள் பிரதமர் ஜட்டீன ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்று வந்தது.
இறுதியில் லிபரல் கட்சி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கனடாவின் இடைக்கால பிரதமராக செயல்பட்ட மார்க் கார்னி, மீண்டும் முழுநேர பிரதமராவார் என கூறப்படுகிறது.
அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில் கனடா பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழர்கள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை ஒட்டுமொத்தமாக கனடா பாராளுமன்ற தேர்தலில் 5 இலங்கை தமிழர்கள் வேட்பாளராக களம் இறங்கிய நிலையில் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனா்.
இந்நிலையில் இலங்கை தமிழர்கள் வெற்றி பெற்று இருப்பது இலங்கை மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமையாக பார்க்கப்படுகிறது.