சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழம்
சர்க்கரை நோயாளிகள் (நீரிழிவு நோயாளிகள்) ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிக முக்கியம். நீரிழிவு மேலாண்மையில் உதவக்கூடிய பருவகால பழமாக நாவல் பழம் அமைந்திருக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் தினமும் 10 நாவல் பழங்கள் வரை சாப்பிடலாம். மதிய உணவுக்கு பிறகு சாப்பிடுவது சிறந்தது. நாவல் பழம் நார்ச்சத்து நிறைந்தது. இது மலச்சிக்கலைத் தடுக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெறும் வயிற்றில் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடுவதற்கு கட்டுப்பாடு இருக்கிறது. சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுதான் அதற்கு காரணம். அதனால் பழங்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு வரப்பிரசாதமாக நாவல் பழம் அமைந்திருக்கிறது.
நாவல் பழத்தில் உள்ள ஜாம்போலின் மற்றும் எலாஜிக் அமிலம் போன்ற சேர்மங்கள், ரத்தத்தில் சர்க்கரை மெதுவாக கலக்க உதவுகின்றன. இவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாவல் பழம் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்தது. இது உடலில் உள்ள நச்சுக்களை குறைத்து, அழற்சியை தணிக்க உதவும். கல்லீரல் செல்களை பாதுகாக்கவும் செய்யும். நாவல்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. ஒரு நாவல் பழத்தில் சுமார் 25 வரையே இருக்கும். இதனால், ரத்தத்தில் திடீரென சர்க்கரை உயர்வதை தடுத்துவிடும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது. நாவல் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பக்கவாத அபாயத்தை குறைக்கவும் துணை புரியும்.
நாவல் பழத்தை டைப்-2 நீரிழிவு நோயாளிகள் முறையாக உட்கொள்வது, உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும். இதனால் உடலில் சரியாக சர்க்கரை பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் நாவல் பழம் முக்கிய பங்காற்றும் என்றாலும், இதை மட்டுமே சாப்பிடுவதால் நோய் குணமாகும் என நினைக்கவேண்டாம். நீரிழிவு நோய்க்கான சிகிச்சைகள், உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றுடன், வாய்ப்பு கிடைக்கும்போது நாவல் பழங்களையும் சாப்பிடுவதால் கூடுதல் பலன் கிடைக்கும்.