பொன்விழா காணும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்; கோலாகல கொண்டாட்டம்!
ஈழத்தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து,இன்று பொன்னகவைப் பெரு விழா காண்கிறது.
இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 06 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இவ் உயர் கல்வி நிலையம், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக வியாபித்து நிற்கிறது.
பொன்னகவையை நினைவு கூரும் நினைவு முத்திரை
ஐம்பதாவது ஆண்டைக் கடந்திருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றது.
காலை 09.00 மணிக்கு ஆரம்பமான பொன் விழா நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்உபதலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல்.வசந்தகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
அதேசமயம் பல்கலைக்கழகத்தின் ஐம்பது வருட கால கல்விப் பணிவரலாற்றை எடுத்தியம்பும் வகையில் அமைந்த வரலாற்றுப் பொக்கிஷமான “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன் அகவை வரலாறு”எனும் நூலும்,பல்கலைக்கழகத்தின் பொன்னகவையை நினைவு கூரும் வகையிலான நினைவு முத்திரை வெளியீடும நிகழ்வில் சிறப்பாக நடைபெற்றது.






