யாழில் வீடு புகுந்து வன்முறை சம்பவம்: கும்பலை சேர்ந்த இருவர் சிக்கினர்!
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாயில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய வன்முறைச் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (23-06-2023) இடம்பெற்றுள்ளது.
யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டடிலில் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தெ.மேனன் தலைமையிலான குழுவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 23, 24 வயதுடைய மானிப்பாயைச் சேர்ந்த சந்தேகநபர்களை கைதுசெய்ததுடன் வன்முறைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள் இரண்டு வாள்கள், இரும்புக் கம்பி ஒன்று என்பனவற்றையும் மீட்டுள்ளனர்.
ஏற்கனவே இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் பழிவாங்கும் நோக்கிலேயே இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றத்தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.