யாழ்.மக்களுக்காக உண்மையாக செயற்பட்டது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை! வைத்தியர் அர்ச்சுனா
"யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாகச் செயற்பட்டது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர்.
இருப்பினும், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடை பெறுகின்றேன்." என யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் இன்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"எனது குரல்வளையை நசுக்கி எவரும் என்னை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. மக்களுக்கான எனது பணி எப்போதும் தொடரும்.
சுகாதார அமைச்சர் தலைமையிலான குழுவின் யாழ்ப்பாண விஜயம் ஒரு நிகழ்ச்சி நிரலுடன் கூடிய கண்துடைப்பு நாடகம் என்பது மட்டுமல்லாமல் ஏமாற்று வித்தையாகும் யாழில் பழிவாங்கப்பட்ட நான் மீண்டும் சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு பேராதனை வைத்தியசாலைக்ககு நியமிக்கப்படவுள்ளேன்.
இங்கிருந்து இன்றுடன் விடை பெறுகின்றேன். இன்று கொழும்பு செல்கின்றேன். எல்லாம் முடிய மீண்டும் இங்கு வருவேன். மக்களுக்கு நன்றி" என அவர் தெரிவித்துள்ளார்.