யாழில் தனி நபரிடமிருந்து பிள்ளைகளை காப்பாற்றுமாறு பெற்றோர் கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நபரொருவர், தமது பிள்ளைகளை அந்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாறு வற்புறுத்தி, பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக பெற்றோர் கவலை வெலியிட்டுள்ளனர்.
அந்த நபரிடமிருந்து தமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, பிரதேச வாழ் மக்களது இயல்பு வாழ்வையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ். அரசடி பிரதேச மக்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
சமூகவிரோத குற்றச் செயல்
இந்த முறைப்பாட்டை இன்று (9) மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளித்த அரசடி பிரதேச மக்கள், ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், குறித்த நபர் நீண்டகாலமாக பல்வேறு சமூகவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கும் சென்றுவரும் ஒருவர் ஆவார்.
எமது அரசடி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இவரது பின்னணியில்தான் நடந்து வருகிறது. இவை குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் நாங்கள் நாளாந்தம் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகிறோம். இந்நிலையில், அண்மையில் அரசடியில் குறித்த சட்டவிரோத நபரால் வெளியூரில் இருந்து சிலர் வரவழைக்கப்பட்டு, வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று நடத்தப்பட்டது.
இதனால் எமது பிள்ளைகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கையில் இறங்கினர். இதன்போது ஒருவர் காயங்களுக்குள்ளானார். அதைக் காரணமாகக் கொண்டு, எமது ஏழு பிள்ளைகளை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆனால், அந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை பொலிஸார் கைது செய்யவில்லை.
எமது பிள்ளைகள் மீது தேவையற்ற வகையில் சோடிக்கப்பட்ட வழக்குகள் பொலிஸாரால் பதியப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியே இன்று மனித உரிமைகள் காரியாலயத்தில் முறைப்பாடு அளித்துள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.