யாழ். மல்லாகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கொல்களம்! உரிமையாளருக்கு நேர்ந்த கதி!
யாழ். மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த கொல்களம் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கொல்களத்தின் உரிமையாளர் இன்று நீதிமன்றில் முன்னிலையானதை அடுத்து ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.
மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி கொல்களம் ஒன்று இயங்கி வருவதாக சுகாதார பிரிவினருக்கு நேற்று (06-05-2024) கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அங்கிருந்து மாடு ஒன்றும் கன்று ஒன்றும் மீட்கப்பட்டது.
மேலும், மாடுகளை வெட்ட பயன்படுத்தும் கூர்மையான ஆயுதங்கள், மாடு கட்டும் கயிறுகள் உள்ளிட்டவற்றை மீட்டனர்.
மீட்கப்பட்ட சான்று பொருட்களை மல்லாகம் நீதிமன்றில் பாரப்படுத்திய வேளை, மாட்டினையும், கன்றினையும் தெல்லிப்பழையில் உள்ள அன்பு இல்லத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிட்ட மன்று, கொல்களத்தின் உரிமையாளரை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.
இதனாடிப்படையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, உரிமையாளர் மன்றில் முன்னிலையானார்.
விசாரணைகளை அடுத்து, அவரை ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
இதேவேளை கொல்களத்தில் மாடுகள் கடத்தி வரப்பட்டு, இறைச்சியாக்கப்பட்டதா? இறைச்சியாக்கப்பட்ட மாடுகள் திருடப்பட்ட மாடுகளா? பசு மாடுகளும் இறைச்சியாக்கப்பட்டுள்ளதா ? போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடாத்தி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.