கொழும்பில் யாழ் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் நள்ளிரவில் அந்தரிப்பு; உதாசீனம் செய்த சாரதி மற்றும் நடத்துனர்
கொழும்பில் முன் பதிவு செய்துவிட்டு யாழ் பேருந்துக்காக காத்திருந்தவர்களை ஏற்றாது நள்ளிரவில் அத்ந்தரிக்க விட்டு சென்ற இ.போ.ச பேருந்து தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
முன் பதிவு செய்த பயணிகள் நிற்பதை அவதானித்தும்கூட , சாரதியும் , நடத்துனரும் அவர்களை உதாசீனம் செய்து ஏற்றாது சென்றதாக கூறப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகள்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவு 10.30 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த பேருந்தில் , நீர்கொழும்பு பகுதியில் நின்று ஏறுவதற்காக மூவர் ஆசனங்களை முற்பதிவு செய்து விட்டு பேருந்துக்காக காத்திருந்தனர்.
அதன் போது, பேருந்தின் நடத்துனர் இரவு 11.45 மணியளவில் பேருந்து குறித்த இடத்திற்கு வரும் என பயணிகளுக்கு அறிவித்திருந்தார்.
அதனை அடுத்து பயணிகள் பேருந்துக்காக அவ்விடத்தில் காத்திருந்த போதும் 11.30 மணியளவிலும் தாம் பேருந்துக்காக காத்திருப்பதனை தொலைபேசி ஊடாக நடத்துனருக்கு பயணிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கும் நடத்துனர் அருகில் வந்து விட்டோம் 11.45 மணியளவில் அவ்விடத்தை வந்தடைந்து விடு வோம் என கூறியுள்ளார். அந்நிலையில் 11.45 மணிக்கு குறித்த பேருந்து அவ்விடத்தினை தாண்டி சென்றுள்ளது.
பயணிகள் மூவரும் பேருந்தினை வழி மறித்த போதிலும் , பேருந்தினை அவ்விடத்தில் நிறுத்தாது சாரதி தொடர்ந்து பயணித்துள்ளார். அதனை அடுத்து பயணிகள் நடத்துனருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போதிலும் , நடத்தினர் தொலைபேசி அழைப்பினை ஏற்கவில்லை.
அந்நிலையில் சுமார் 30 நிமிடங்கள் கழித்து தொலைபேசி அழைப்பினை எடுத்த நடத்துனர் , பேருந்து குறிப்பிட்ட இடத்தில் நிற்பதாகவும் , அங்கு வந்து பேருந்தில் ஏறுமாறும் கூறியுள்ளார்.
உதாசீனம் செய்த சாரதி மற்றும் நடத்துனர்
பயணிகள் நிற்கும் இடத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் பேருந்தினை நிறுத்தி விட்டு , அங்கு வந்து ஏறுமாறு கூறினால் , தாம் நள்ளிரவு வேளை எவ்வாறு அங்கு சென்று பேருந்தில் ஏற முடியும் என நடத்துனரிடம் கோரியுள்ளனர். அதற்கு நடத்துனர் , குறித்த இடத்தில் நிற்கிறோம். வந்து ஏறுங்கள் என்றே கூறியுள்ளார்.
இது தொடர்பில் , இலங்கை போக்குவரத்து சபையின் பொறுப்பதிகாரியிடம் தொலைபேசி ஊடாக முறையிட்ட போதிலும் , அவரும் பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை பேருந்து பயணத்திற்கு முற்பதிவு செய்தவர்களை இடையில் ஏற்றாது செல்லும் நிலைமைகள் அண்மைக்காலமாக அதிகரித்து உள்ளதாக பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
முற்பதிவு செய்தவர்கள் இடையில் ஏறுவதால் , பேருந்து புறப்படும் போது , ஆசனங்கள் கேட்பவர்களை அந்த ஆசனங்களில் ஏற்றி செல்வதால் தான் இடையில் ஏற இருப்பவர்களை வேண்டும் என்றே ஏற்றாது செல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.