இலங்கையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தவறு!
இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தவறான விடயம் என நாசாவின் இலங்கை வானியலாளர் கலாநிதி கவன் ரத்னதுங்க தெரிவித்துள்ளார்.
புத்தரின் தத்துவம் அறிவியலுடன் ஒத்துப்போகும் உலகளாவிய தத்துவம் என சுட்டிய அவர், இன்று இலங்கையில் புத்தரின் தத்துவத்தை திரித்து பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நிலை காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே கலாநிதி கவன் ரத்னதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இந்நாட்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாமல் புத்தரின் தத்துவத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.
வெளிநாட்டில் புத்தரின் தத்துவத்தைப் பின்பற்றுபவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள தான் தயங்குவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், சிங்கள மொழியில் தொடர்பு கொள்ளும் முன்னணி ஊடக நிறுவனங்கள் கூட சில விஞ்ஞான உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்தத் தயங்குவதாகவும் கலாநிதி கவன் ரத்னதுங்க குறிப்பிட்டுள்ளார்.
கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய, குறிப்பிட்ட சிலரால் சமூகமயப்படுத்தப்பட்ட அறிவியலுக்குப் புறம்பான உண்மைகளை உள்வாங்கிய மக்களின் அச்சமும், அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தச் செல்லும்போது எழும் பொது எதிர்ப்புமே இதற்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, புத்தரின் இலங்கைக்கான முதல் மற்றும் இரண்டாவது பயணங்கள் பற்றிய ஒரு சிறப்புத் தகவலையும் அவர் அந்த செவ்வியின்போது வெளியிட்டதாகவும் கூறப்படுகின்றது