அமெரிக்காவிற்கு ஈரானின் நெத்தியடி பதில் ; நொடிக்கு நொடி எகிறும் பதற்றம்
அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.
திணிக்கப்பட்டுள்ள இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்த முன்மொழிவுகளுக்கு ஈரான் எதிர்மறையான பதிலையே அளித்துள்ளதாக சிரேஷ்ட அரசியல்-பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று (25) தெரிவித்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர்நிறுத்தம்
பகைமை நிலைகளை நிறுத்துவதானது ஈரானின் சொந்த நிபந்தனைகள் மற்றும் கால அட்டவணையின்படியே அமையும் என்பதில் ஈரான் உறுதியாக இருப்பதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ட்ரம்ப் நிர்வாகத்தினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட போர்நிறுத்த நிபந்தனைகள் அடங்கிய உத்தியோகபூர்வ ஆவணத்தைப் பாகிஸ்தான் அதிகாரிகள் ஈரானிடம் கையளித்ததாக 'அல் ஜசீரா' செய்திச் சேவை தெரிவித்திருந்தது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராகச் செயற்பட்டு வருகின்ற நிலையில், இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக ஈரானின் உத்தியோகபூர்வ பதிலுக்காகப் பாகிஸ்தான் காத்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த எதிர்மறையான பதில் மத்தியஸ்த முயற்சிகளில் ஒரு தேக்கநிலையை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், திட்டமிட்டபடி அடுத்த சில நாட்களில் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையிலான நேரடி சந்திப்பொன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறுமா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.