மாற்றப்பட்ட விடுமுறை ; வெசாக் பௌர்ணமி தினம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பௌத்த விவகார திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் பின்னணியிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை
மும்மகா நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் பௌர்ணமி தினத்தில் 'விசாக' நட்சத்திரம் அமைந்திருக்க வேண்டும் என்பதை மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் 06ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை சாசனாரக்ஷக கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே மாதம் 30ஆம் திகதியை வெசாக் பௌர்ணமி தினமாக கருத வேண்டும் என்றும், மே 27ஆம் திகதி முதல் ஜூன் 02ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக அறிவிக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டதாக பௌத்த விவகார திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் அண்மையில் வெளியிட்டிருந்தது.
முன்னதாக மே மாதம் 2ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறையைத் திருத்தம் செய்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்து.