ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது வெளியான மேலும் பல தகவல்கள்
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான மேலும் பல தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இதன்போது வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குறித்த அவநம்பிக்கை பிரேரணையைக் கொண்டு வந்து, விவாதம் நடத்தப்படுமாயின் அது குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற விதிகளுக்கு அமைய, முதலில் குறித்த அவநம்பிக்கை பிரேரணை நாடாளுமன்றுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னோக்கிச் செல்கின்றன. முன்னதாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கும் மேலதிகமாக தற்போது பல தகவல்களை வெளிப்படுத்த முடியும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அப்போதைய அரசாங்கத்தின் மூன்றாவது முக்கியஸ்தராக சஜித் பிரேமதாசவும் சிறிது காலம் காவல்துறையினருக்குப் பொறுப்பான அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் இருந்தனர் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் இந்திய தரப்பினரின் தலையீடு உள்ளதாக, ஏற்கனவே நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தாக்குதலின் பின்னணியில் இந்திய அரசு உள்ளதாக தாம் ஒருபோதும் கூறவில்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் அங்குள்ள சில பயங்கரவாத குழுக்கள் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் இருந்திருக்க கூடும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.