யாழ்ப்பாண மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் கொடூர தாக்குதல்; கடலில் அராஜகம்
யாழ்ப்பாணம் பலாலி வடக்கு அன்ரனிபுரம் பகுதியிலிருந்து நேற்று மாலை கடலுக்குச் சென்ற மீனவர்கள், இந்திய மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலாலி கடற்பரப்பிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி வந்த ஐந்து இந்திய மீனவர்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பெற்றோல் குண்டுகளை வீசியும், வாள்களால் வெட்டியும் தாக்குதல்
சம்பவத்தின் போது, இந்திய மீனவர்கள் பெற்றோல் குண்டுகளை வீசியும், வாள்களால் வெட்டியும் இலங்கை மீனவர்கள் மூவர் மீது கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17, 18 மற்றும் 27 வயதுடைய சகோதரர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின் போது, மூன்று பிள்ளைகளின் தந்தையான 27 வயதுடைய மீனவரை இந்திய மீனவர்கள் கயிற்றால் கட்டித் தமது படகில் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
காயமடைந்த மற்றைய இரு இளைஞர்களும் தப்பித்துக் கரை சேர்ந்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட இலங்கை மீனவர் தற்போது இந்தியாவின் நாகப்பட்டினம் அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.