அஷ்வின் தொடர்பில் உணர்ச்சிபூர்வமாக பேசிய இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்!
டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அணி சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்கள் எடுத்து முதல் இடத்தில் நீடித்துள்ளார்.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் (Ravichandran Ashwin) 6 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் கபில்தேவின் 434 விக்கெட் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
அவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அஷ்வின் 85 போட்டிகளில் 436 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், தனது சாதனையை முறியடித்த அஸ்வினுக்கு கபில்தேவ் (Kapil Dev) பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய அணியில் சமீப காலமாக அஷ்வினுக்கு சரியான முறையில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார்.
அவருக்கு தொடர்ந்து அணியில் இடம்கொடுத்திருந்தால் எப்போதோ 434 விக்கெட் என்ற இலக்கைக் கடந்திருப்பார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக என்னிடம் இருந்த 2வது இடத்தை அஷ்வின் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அஷ்வின் வியக்கத்தக்க வீரர். சிறந்த புத்தசாலித்தன்மான பந்து வீச்சாளர். அடுத்து அவர் 500 விக்கெட் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இதனை அடைய முயற்சி செய்து கட்டாயம் சாதிப்பார் என உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அதையும் தாண்டி அஷ்வின் அசத்தலாம் எனவும் கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார்.