இலங்கை தொடர்பில் ஐநாவில் இந்தியா கூறியது என்ன?
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு மாகாணசபை தேர்தல்களை முன்கூட்டியே நடாத்துதல் குறித்த தனது உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என ஐநாவில் இந்தியா இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் , இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்திர மணிப்பாண்டே இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,
அருகில் உள்ள அயல்நாடு என்ற அடிப்படையில் 2009ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையின் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் நிவாரணம் மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளிற்கு இந்தியா பெருமளவு உதவியை வழங்கியுள்ளது.
முன்னர் ஒருபோதும் இல்லாத உதவி
மிகச்சமீபத்தில் ஜனவரிக்கு பின்னர் இலங்கை மக்கள் சமீபத்தைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உதவுவதற்காக இந்தியா முன்வந்து முன்னர் ஒருபோதும் இல்லாத உதவியை வழங்கியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இந்தியா எப்போதும் தமிழ்மக்களின் சமத்துவம் நீதி கௌரவம்அமைதி ஐக்கியம் ஆகிய அபிலாசைகளிற்கு ஆதரவளித்தல் இலங்கையின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு ஆதரவளித்தல் என்ற இரு அடிப்படை கொள்கைகளால் வழிநடத்தப்பட்டுள்ளது.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு மாகாணசபை தேர்தல்களை முன்கூட்டியே நடாத்துதல் குறித்த இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழிகளை நாங்கள் கருத்தில் எடுத்துள்ளோம்.
முன்னேற்றம் போதுமானதல்ல
இது தொடர்பான முன்னேற்றம் போதுமானதல்ல என நாங்கள் கருதுகின்றோம் என கூறிய அவர், இந்த உறுதிமொழிகளை விரைவில் நடைமுறைப்படு;த்துவது குறித்து அர்த்தபூர்வமாக இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
அனைத்து இலங்கையர்களிற்கும் பொருளாதார செழிப்பை ஏற்படுத்துவதும் இலங்கையில் தமிழ் மக்களின் கௌரவம் அமைதி மற்றும் பொருளதார வளம் ஆகியவற்றிற்கான நியாபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்றுவதும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் தமிழர்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்றுவது அனைத்து இலங்கையர்களிற்குமான பொருளாதார செழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இந்தியா இலங்கை மற்றும் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்படும் எனவும் அவர் கூறினார்.