க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்து கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2026 உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குப் போதுமான காலம் உள்ளதால், பரீட்சை நடத்தப்படும் காலப்பகுதியைத் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என அந்த அறிக்கையில் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

உயர்தரப் பரீட்சை
தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஆசிரியர் வழிகாட்டிக்கு இணங்க, உயர்தரப் பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்குத் தேவையான நாட்களின் எண்ணிக்கை 300 ஆகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 2026 ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை 343 ஆகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக, கடந்த பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் இந்த முறை பரீட்சை நடத்தப்படும் நாள் வரையிலான இடைவெளி 4 மாதங்களும் 10 நாட்களும் ஆகும் என அந்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, 2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குரிய முறையான காலம் கிடைத்துள்ளதால், பரீட்சை நடத்தப்படும் காலப்பகுதியைத் திருத்தம் செய்ய வேண்டிய எந்தவொரு தேவையும் எழவில்லை என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.