சட்டவிரோத இந்திய மருந்துகள் ; விமான நிலையத்தில் பெண் உட்பட நால்வர் கைது
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் பசுமைப் பாதையூடாக (Green Channel) இந்த மருந்துப் பொருட்களைக் கொண்டு வர முயற்சித்த போதே, இன்று (07) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஊசி மருந்துகள், மாத்திரைகள், கெப்ஸ்யூல்
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் இந்தியாவின் பெங்களூர் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களின் 08 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஊசி மருந்துகள், மாத்திரைகள், கெப்ஸ்யூல் (Capsule) வகை மருந்துகள் மற்றும் பூசு மருந்துகள் (Ointments) உள்ளிட்ட மருந்துப் பொருட்களைச் சுங்க அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
இந்த மருந்துப் பொருட்கள் குறித்து சுங்கத் திணைக்களத்திற்குத் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதுடன், சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முறையான அனுமதியின்றி இவை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.