ஈஸ்டர் தின தாக்குதல்; சர்வதேச விசாரணைக்கும் நான் தயார்; பிள்ளையான்
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளிப்படுத்திய தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தாம் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
ஏப்ரல் 21 ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று முன்தினம் தெளிவுப்படுத்தப்பட்டிருந்தது.
நிரோஷன் பெரேரா உரையில் குறுக்கிட்ட பிள்ளையான்
தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிடும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும் அதன்போது தெளிவுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்றைய பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா முன்வைத்து உரையாற்றியபோது,
2019ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இதுவரை அதனுடன் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படாதுள்ளமை கவலையளிப்பதாக குறிப்பிட்டார்.
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்கு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிலர் தடையாக இருந்துள்ளனர்.
சர்வதேச விசாரணைக்கு தயார்
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டு அப்பாவி பொதுமக்கள் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே, ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்பில் இந்த தாக்குதல் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதன்போது அவரது உரையின் நடுவில் குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், இது தொடர்பில் தாம் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.