வேருடன் சரிந்து விழுந்த பாரிய மரம் ; சாரதிகள் அவதானம்
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் மார்காஸ் தோட்டம் கெமுனுபுர பகுதியில் கிரகரி வாவி காரையோரத்தில் பாரிய மரம் ஒன்று வேருடன் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (27) காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
மின் கம்பமும் விழுந்து சேதம்
நுவரெலியா பொலிஸார், மாநகரசபை தீயணைப்பு பிரிவினர்,இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் இணைந்து உடனடியாக மரத்தை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மரம் விழுந்ததன் காரணமாக குறித்த பகுதிக்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மின் கம்பமும் விழுந்து சேதமடைந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலையால் பிரதான வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.