வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளை; மக்களுக்கு எச்சரிக்கை
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஆரம்பித்துள்ள ரமழான் நோன்பு காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டியுள்ளதனால் அதனை பயன்படுத்தி திருடர்கள் வீடுகளை உடைத்து இடம்பெறும் கொள்ளை சம்பவங்கள் தொடர் கதையாகவே உள்ளது.
வீடு உடைக்கப்பட்டு 13 இலட்சம் ரூபாய் பணம்
கடந்த மாதம் (27) சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகளீர் பாடசாலைக்கு அருகிலுள்ள வீடு உடைக்கப்பட்டு 13 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது.
அத்துடன் முறைப்பாடுக்கு அமைய கடந்த சனிக்கிழமை (01) மலையடிக்கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து திருடப்பட்ட பணத்தின் ஒரு தொகை உட்பட வீடு உடைப்பதற்கு பயன்படுத்த உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
இருப்பினும் இவ்வாறான வீடு உடைப்பு மற்றும் சட்டவிரோத கொள்ளை பொதுமக்களின் கவனயீனத்தால் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த, சட்டவிரோத நடவடிக்ககைகளை தடுப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியினை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.