மரண வீட்டில் மோதல்; முக்கிய பிரமுகர்கள் கைது
வலப்பனை - மந்தாரம்நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமுள்ள தோட்டத்தில் நேற்று மாலை தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர் மந்தார நுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் இன்று அதிகாலை நான்கு மணியலவில் கைது செய்துள்ளதாக மந்தாரம்நுவர பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் இந்த தாக்குதல் சம்பவத்தினால் மந்தாரம்நுவர,எலமுள்ள,மற்றும் கபரகலை வாசிகள் என 200 க்கு மேற்பட்டவர்கள் மந்தாரம்நுவர தியகலஹீனையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்காவின் சகோதரரின் வீடு,பிரதேச சபை உறுப்பினரின் வீடு மற்றும் வாகனம் ஒன்றை தாக்கி சேதப்படுத்தி உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
எலமுள்ளை தோட்டத்தில் மரண வீடுக்கு அஞ்சலி செலுத்த சென்ற நிலையில், எலமுள்ள மற்றும் கபரகலை வாசிகளுக்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் சண்டையாக மாறி கைகலப்பாகியதில் இரண்டு இளைஞர்களை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்காவின் சகோதரர் கீர்த்தி குடாபண்டார ரத்நாயக்கா, ஹங்குராங்கெத்த பிரதேச சபையின் மாட்டு கட்சி உறுப்பினர் அஜீத் மற்றும் பிரதேச வாசியான சிந்திகக ஆகியோர் தாக்கியுள்ளனர்.
அதன் பின் ஒன்று சேர்ந்த 200 க்கு மேற்பட்ட பிரதேச வாசிகள் அவர்களை விரட்டியதுடன் இவர்களின் வீடுகள், வாகனம் ஒன்றையும் தாக்கி உடைத்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உயர் மட்ட பொலிஸார் மேற்கொள்வதுடன் கைது செய்யப்பட்டுள்ளவர்களை வலப்பனை நீதிமன்ற மன்றில் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.