வெளிநாடுகளில் ஈழத் தமிழர் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது; சீமான் ஆவேசம்
வெளிநாடுகளில் வெளியிடப்பட்டுள்ள, தமிழ் குழந்தைகளுக்கான தமிழ் பாட புத்தகங்களில், தமிழர்களின் வரலாறு முழுமையாக திரிக்கப்பட்டுள்ளமை கடும் கண்டனத்துக்குரியது என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை என்ற அமைப்பால், தமிழ் குழந்தைகளுக்காக, தமிழ்பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அப்புத்தகங்களில், தமிழர்களின் வரலாறு முழுமையாக திரிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
ஈழத்தின் பூர்வகுடிகள் தமிழர்கள் இல்லை என்றும், தமிழ் மன்னர்கள் சிங்கள மக்களை துன்புறுத்தியதாகவும் தமிழர்கள் போராடியதால் தான் கொல்லப்பட்டனர் என, கற்பனையில் பொய்களை, தமிழர் இன வரலாறாக மாற்ற முனையும் வன்மச் செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் ஈழ தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில், அவர்களுக்கு எதிராக திட்டமிட்டு செய்யப்படும் அவதுாறுப் பிரசாரத்தை தடுத்து முறிடியக்க வேண்டும் என்றும், தமிழர்களின் மெய்யான வரலாற்றை நிலை நிறுத்த, உலகத் தமிழர்கள் துணை நிற்க வேண்டும் எனவு ம் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.