தமிழர் பகுதியொன்றை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் காட்டு யானைகள் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்திற்குள் வியாழக்கிழமை (09.10.2025) அதிகாலை 03 மணியளவில் புகுந்த காட்டுயானைகள் அங்குள்ள 03 வீடுகளையும் தென்னை, வாழை, உள்ளிட்ட பயிரினங்களையும், துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளையில் இவ்வாறு காட்டுயானைகள் திடீரென கிராமத்திற்குள்ள புகுந்ததனால் அங்குள்ள மக்கள் மயிரிழையில் உயிர் தப்பிய தாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இவ்வாறு மெல்ல மெல்ல கிராமங்களுக்குள் உட்புகுந்த காட்டுயானைகள் தற்போது மக்கள் குடியிருப்புக்குள்ளேயே நிலைகொண்டுள்ளதனால் அப்பகுதி மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளைக்கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
காலத்திற்கு காலம் மாற்றம் பெறும் அரசாங்கங்கள் காட்டுயானைப் பிரச்சனைக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக தெரிவித்து வந்திருந்த போதிலும் அதற்கு முற்றுப் புள்ளி வைக்காத இந்நிலையில் தந்போது நாட்டைப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கமாவது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.