நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்
நுவரெலியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (14) காலை முதல் தொடர்ந்து கடுமையான மழையுடன் பனிமூட்டம் நிலவி காணப்படுகின்றன.
நுவரெலியா , கந்தபளை, நானுஓயா, லிந்துலை போன்ற இடங்களில் கடுமையான மழையுடன் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகின்றன.
இதன் காரணமாக வாகனங்களை செலுத்தும்போது முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா - பதுளை பிரதான வீதி , நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதி மற்றும் நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் அதிகமாக வாகனப் போக்குவரத்து உள்ளமையால் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டும் .
கடும் பனிமூட்டம் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியா வரும் வாகன சாரதிகள் வாகனங்களை இயக்க முடியாமல் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே பிரதான வீதிகளில் ஊர்ந்து செல்வதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் நுவரெலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.