சூடுபிடித்துள்ள கொள்கலன் விவகாரம்: சுங்க அதிகாரிகள் சங்க தலைவர் கைது செய்யப்படுவாரா?
சுங்கத்திலிருந்து சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் வெளியில் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எங்களை குற்றம் சாட்டாமல் இதனை வெளிப்படுத்திய சுங்க தொழிற்சங்க தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இதனை தெரிவித்தார்.
கொள்கலன் விடுவிப்பு
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், சுங்க தொழிற்சங்க கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில்,இறக்குமதி கொள்கலன்களின் நீண்ட தூர வரிசையில் மறைந்து, சுங்க பணிப்பாளர் நாயகம், சுங்க கொள்கலன் விடுவிப்பு ஒழுங்குவிதிகளுக்கு முரணாக செயற்பட்டுள்ளார்.
அதன் பிரகாரம் சுங்கத்தில் இருந்து கட்டாயமாக பரீட்சிக்க வேண்டும் என சுங்க முகாமைத்துவ பிரிவால் இனம் காணப்பட்டு சிவப்பு அட்டை ஒட்டப்பட்ட 323 கொகலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் ஜீ.ஜே, சன்ஜீவ கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார்.
சுங்கத்தில் இருந்து 323கொள்கலன்கள் பரீட்சிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் பொய் தெரிவிப்பதாக அமைச்சர் தெரிவிக்கிறார். 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் தெரிவிக்கவில்லை. சுங்க அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தெரிவி்த்திருப்பது பொய் என்றால் அவரை கைதுசெய்து விசாரணை செய்யுங்கள். அதனை விடுத்து எங்களை குற்றம் சாட்ட வேண்டாம்.
அரசாங்கம் தொழிற்சங்கங்களுக்கு பயம். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டுகிறது. அநுர குமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக்க உதவி செய்தவர்களே அந்த குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். அது மாத்திரமல்ல, இந்த 323 கொள்கலன்களில் இதற்கு முன்னர் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் இருப்பதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அரசாங்கம் எங்கள் மீது குற்றச்சாட்டு தெரிவிக்காமல் இந்த விடயத்தை வெளிப்படுத்திய சுங்க தொழிற்சங்க அதிகாகரிகளை விசாரணை மேற்கொண்டு இது தொடர்பான உண்மை நிலையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.